Monday, August 30, 2010

ஆதிதிராவிடர் பெயர் வேண்டாம்

ஆதிதிராவிடர் பெயர் வேண்டாம்!க.பழனிசாமி, வணிகவரித் துறை துணை ஆணையர் (ஓய்வு), ராமநாதபுரம், கோவையிலிருந்து எழுதுகிறார்: மழைக் கடவுளாம் இந்திரனை குல தெய்வமாகக் கொண்டு, சங்க காலத்தில் மள்ளர்கள் என்று அழைக்கப்பட்ட, மூவேந்தர் பரம்பரையில் வந்த உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களை மட்டும், முதல்வர் இன்னும் ஆதிதிராவிடர் என்று அழைப்பதேன்? தெரிந்தே அவ்வாறு அழைக்கிறாரா?வடக்குத் தமிழகத்தில் உள்ள ஆதி திராவிடர்களின் ஓட்டு வங்கியில் மயங்கித்தான், திருமாவளவனை பக்கத்தில் வைத்துக் கொள்கிறார். தெலுங்கு பேசும் அருந்ததிய மக்களை, தெலுங்கு பேசும் விஜயகாந்த் தன் வசம் இழுத்து விடுவாரோ என்ற அச்சத்தால் தான், புதிய கண்டுபிடிப்பாக, அருந்ததிய மக்களை அரவணைத்துக் கொள்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.அருந்ததியர்களை அவர் ஆதிதிராவிடர் என்று அழைப்பதில்லை; ஆனால், தேவேந்திரகுல வேளாளர்களை ஏன் ஆதிதிராவிடர் என்று அழைக்கிறார்?தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்டவை, மூன்று இனம் மட்டுமே. தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் அருந்ததியர்கள். இவர்களை கொச்சைப்படுத்தி மகிழ்கிற இனப்பெயர்கள், முறையே பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர்.இவர்களுக்கு மட்டுமல்ல... பெரும்பாலும் எல்லா இனமக்களுக்கும் அது போன்று ஒரு பெயர் உண்டு. பிராமணர்கள், அய்யர் இனத்தவர்களை பார்ப்பான் என்றும், முக்குலத்தோரை கள்ளர்கள், நாடார்களை சாணர்கள், வன்னியர்களை பள்ளியர்கள், முதலியார்களை கைக்கோளர்கள், நாயுடுகளை வடுகர், தெலுங்கு நாயக்கன் என்றும், செட்டியார்களை கோமுட்டி என்றும் சொல்லி மகிழ்கிற மக்கள் வாழ்கிற மாநிலம் இது!இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, தமிழக முதல்வர், அந்தந்த இனமக்களின் பெருமைக்குரிய பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு புதிய கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவதே."உழுத சால் மிக ஊறித் தெளிந்த சேறு இழுது, இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்' என்று கம்பர் பாடியுள்ளார்.அருந்திறல் வீரர்!; பெருந்திறல் உழவர்! இவர்களே மள்ளர்கள் என்கிறது, கி.பி., ஒன்பதாம் நூற்றாண்டு திவாகர நிகண்டு.அன்று முதல், இன்று வரை, உழவுத் தொழில் செய்பவர்கள்; மாட்டு இறைச்சி உண்ணும் மக்களிடையே, இன்றும் மாடுகளை போற்றி வணங்கும் மக்கள்; ஒருவனைக் கொல்வது என்றாலும், நெஞ்சிலே குத்திக் கொல்பவர்கள் மட்டுமல்ல, கொல்லப்படுவது என்றாலும், நெஞ்சிலே காயம் பட்டு மரித்துப் போக விரும்பும் மக்கள்; இன்னமும் நூற்றுக்கு மூன்று பேர் கூட பட்டதாரிகள் இல்லாத பரிதாபத்திற்கு உரிய மக்கள்!; இதுதான் இந்த மக்களைப் பற்றிய கணிப்பு.இத்தகைய மக்களை, தேவேந்திரகுல வேளாளர் என்று தமிழக முதல்வர் அழைத்தால், ஒரு கோடி மக்களும், உள்ளம் மகிழ்ந்து, அவரை வாழ்த்துவர். நற்பண்புகளை உருவாக்குகிற கல்வியை இவர்களுக்கு வழங்க, முதல்வர் முன்வர வேண்டும்.இவர்களின் பெற்றோர் அருந்துகிற மதுபானத்தில் கிடைக்கும் வரித் தொகையில், இலவச தொலைக்காட்சி பெட்டிகளும், அரிசியும் கொடுப்பதற்கு பதிலாக, பள்ளி இடைநிற்றல் என்று அபாயகரமான நச்சு சுழலில் சிக்கி காணாமலே போய்விடுகிற லட்சக்கணக்கான ஏழை பள்ளி மாணவர்களை, கல்லூரிப் படிப்பு படிக்க வைத்து, ஒழுக்கமானவர்களாக உயர வழி செய்ய வேண்டும்.பள்ளர், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான், மூப்பர் என்று பல வகையான பெயர்களிட்டு ஜாதிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டிருக்கிற நிலையை மாற்றி, இந்த அனைத்து வகை உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, தேவேந்திரகுல வேளாளர்கள் என்று பெயரிட வேண்டும்.இந்த ஒரு ஆணையின் மூலமாக, இந்த இனத்து மக்களின் தன்னம்பிக்கை உயரும். தன்னம்பிக்கை உயர்ந்தால், கல்வியில் மேன்மை மிக்கவர்களாக உயர்வர். வன்முறையற்ற நற்பண்புகள் உருவாகி, நல்ல பண்புமிக்க மனிதர்களாக இந்த இனத்து மக்கள் மாறுவர்.thanks dinamalar chennai 30/8/2010

Sunday, August 29, 2010

பணம்

வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளித்தால் வரியில் 20 சதவீதம் கமிஷன் வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கும் என மத்திய இணையமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்துள்ளார். சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகளின் மூலம் ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளித்தால் வரி வசூலில் 20 சதவீதமும், வருமான வரி, கார்ப்பரேட் வரி ஏய்ப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 சதவீதமும் கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய வடிவிலான பிணையில்லா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறிய அளவிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், வியாபாரம், சேவை சார்ந்த தொழில்களுக்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் சிறிய அளவில் தொழில் துவங்க முன் வரும் இளைஞர்களும், வியாபாரம், சேவை போன்றவற்றில் ஈடுபட விரும்பும் இளைஞர்களும் வாய்ப்பை இழந்தனர். இக்குறையை போக்கும் வகையில் மத்திய அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கு திட்டம் (யூ.ஒய்.இ.யூ.பி.,) என்ற புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் வேலையில்லா இளைஞர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் வரை புதிய தொழில் துவங்க பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.

திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் அரசு மானியமாக வழங்குகிறது.கடன் பெறுவோர் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக நிதி செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட, ஆண்டு வருமான 1.50 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் கடன் பெற தகுதியானவர்கள். நேரடி விவசாயம் தவிர தொழில், உற்பத்தி தொழில், வியாபாரம், சேவை தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் பரிந்துரையின் பேரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.

Friday, August 27, 2010

மனிதர்கள்

முகங்கள்: ""பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை''

நீதி. செஙகோட்டையன்
First Published : 22 Aug 2010 04:30:00 PM IST

Last Updated : 22 Aug 2010 04:33:40 PM IST

சுயநலம் எனும் பிணி மனித சமுதாயத்தை ஆட்கொண்டுள்ளதால் அதன் பாதிப்புக்குள்ளாகாத மனிதர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. தான், தனது குடும்பம் என்ற மனநிலையுடைய மனிதர்கள் நிறைந்துள்ள இச் சமுதாயத்தில் தங்களது வாழ்வை பிறருக்காகவே அர்ப்பணித்துக் கொண்டுள்ளோரும் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்குப் பல்குணனும் சான்று.

கேரளத்தின் கள்ளிக்கோட்டை மாவட்டத்தில் மடப்பள்ளி கிராமத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பல்குணன். பள்ளி பருவத்திலேயே பெற்றோர்கள் தன் செலவுக்குத் தரும் சில்லறை காசுகளை சேர்த்துவைத்து தன்னுடன் பயின்ற ஏழை, எளிய மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவத் தொடங்கி, "பிறருக்காக வாழ்வதற்கே நாம் பிறந்துள்ளோம்' என்ற உயர்ந்த குணத்தை மனதில் விதையாய் விதைத்து வளர்க்கத் தொடங்கினார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் காலச் சக்கரத்தின் சுழற்சியில் தமிழகத்துக்கு வந்து சேர்ந்த அவர், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் மலையாள ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பள்ளியில் பணிபுரியும் போதே மாலை நேரத்தில் அருகில் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தல், ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோருக்கு தன்னால் எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் உதவி வந்த பல்குணன், பணி ஓய்வுக்குப் பின்னர் ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கண் திறந்து வைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கல்வி கற்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்குக் கல்விக் கண் திறந்து வைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ள பல்குணன், இதற்காக "லேண்ட்மார்க்' என்ற சமுக சேவை அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் மூலம், பிரதிபலனை எதிர்பாராமல் சேவை செய்பவர்களை ஒருங்கிணைத்து கல்விக்காக ஏங்கும் சிறார்களுக்கு உதவிக்கரம் நீட்டிவருகிறார்.

தனது சேவை அமைப்பின் முதல் பணியாக சிந்தாதிரிப்பேட்டையில் வாழும் நூற்றுக்கணக்கான குடிசை வாழ் மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி போதித்து வருகிறார்.

வாழ்வில் திருமணத்தை ஒதுக்கித் தள்ளி, இந்தச் சமுதாயத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பல்குணனைப் பற்றி கேள்விப்பட்டதும் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நமக்குத் தோன்றியது.

அந்திசாயும் வேளையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஏழைக்குழந்தைகளுக்கு மத்தியில் நீண்டதாடியுடன் அமர்ந்து உற்சாகமாக கல்வி கற்பித்துக்கொண்டிருந்த பல்குணனைச் சந்தித்தோம்....

பிறருக்கு உதவி செய்ய எத்தனையோ வழிகள் இருக்கையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

கல்விதான் ஒரு மனிதனுக்கு அழியாத சொத்து. நல்ல கல்வியால் மட்டுமே நாளைய நல்லதோர் சமுதாயத்தைப் படைக்க முடியும். அப்படியே இருந்தாலும் பிறருக்கு உதவும் அளவுக்கு என்னிடம் பொன்னோ பொருளோ இல்லை. என்னிடம் உள்ள ஒரே செல்வம் கல்விதான். இதன் மூலம் பிறருக்கு என்னால் எந்த வழியில் உதவ முடியுமோ அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

உங்கள் சேவை அமைப்பு மூலம் கல்வி கற்பிக்க முதலில் சிந்தாதிரிப்பேட்டையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

இதற்கென்று தனிப்பட்ட காரணம் ஒன்றுமில்லை. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை குடிசை வாழ் மக்களின் வாழ்க்கை குறித்து கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்த்த போது அவர்களின் நிலை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. அங்கு வசிக்கும் குழந்தைகளின் கல்வி நிலை கண்டு வேதனை அடைந்தேன். இதையடுத்துதான் அவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சிந்தாதிரிப்பேட்டையில் எவ்வளவு நாளாக கல்வி கற்பிக்கிறீர்கள்? எத்தனை மாணவர்கள் உங்களிடம் படிக்கிறார்கள்?

கடந்த ஓராண்டாக கற்பித்து வருகிறேன். சுமார் 100 மாணவர்கள் படிக்கின்றனர். அனைவருமே இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். நான் முதன் முதலாக இங்கு பாடம் எடுக்க வந்த போது 10-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களுக்கு ஏ,பி,சி,டி கூட தெரியாமல் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதுபோன்ற மாணவர்களுக்கு தினசரி பாடம் எடுப்பது தவிர்த்து, அடிப்படைக் கல்வியையும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். இப்போதெல்லாம் இவர்கள் ஆங்கிலத்தை தலைகீழாகப் படிக்கும் அளவுக்கு தேறிவிட்டனர். இது உண்மையிலேயே மனதுக்கு மகிழ்ச்சியாக இருகிக்கிறது.

கல்வி கற்பித்தல் தவிர்த்து ஏழை மாணவர்களுக்கு வேறு எந்தவிதத்தில் உதவுகிறீர்கள்?

எனக்கு மாதம் குறைந்த அளவு ஓய்வூதியம் வருகிறது. நான் சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருக்கும் அறைக்கான வாடகை, சாப்பாட்டுச் செலவு போக ஒவ்வொரு மாதமும் சில நூறு ரூபாய் எனக்கு மிச்சமாகும். அந்தப் பணத்தை ஏழை மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்விச் செலவுக்காக உதவி வருகிறேன். சிந்தாதிரிப்பேட்டையில் சுகாதாரமில்லாமல் இருப்பதால் மாணவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதுபோன்ற தருணத்தில் என்னால் முடிந்தவரை அவர்களுக்கான மருத்துவச் செலவை ஏற்கிறேன்.

உங்கள் சேவைப் பணியில் யாரெல்லாம் உங்களுக்கு உறுதுணையாக உள்ளனர்?

எத்தனையோ நல்லவுள்ளங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்கள் சிலர் அவர்களது பணிச்சுமைக்கு நடுவிலும் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்து மாணவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுக்கின்றனர். சேவை மனப்பான்மையுடைய சிலர் மாணவர்களுக்கு தேவையான உடை, நோட்டு, புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

சரி, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

நாம் இந்தச் சமுதாயத்துக்காக வாழப்போகிறோம் என்று கல்லூரி படிக்கும்போதே முடிவெடுத்தேன். எனது இந்த வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதினேன். இதனால் திருமணத்தை ஒதுக்கிவிட்டு சமூக சேவையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். சமூக சேவையை நான் கடமையாகவே நினைக்கிறேன். எனது கடமையை தவறாமல் செய்வதில் திருப்தி அடைகிறேன்.

நாலுபேருக்கு நல்லதை செய்துவிட்டு தினசரி படுக்கை அறைக்கு செல்லும்போது மன நிறைவாகவும், நிம்மதியாகவும் உள்ளது. இறுதி மூச்சுவரை இதேபோன்று பிறருக்காக வாழுவதற்கான தெம்பை அளிக்க வேண்டும் என்றே தினசரி ஆண்டவனிடம் மண்டியிட்டு வேண்டிக் கொள்கிறேன்.

மனிதர்கள்

உதவி: தாத்தா காட்டிய வழியில்..!உதவி: தாத்தா காட்டிய வழியில்..!

ந.ஜீவா
First Published : 22 Aug 2010 04:21:00 PM IST

Last Updated :

மனைவியுடன் வி.என். சிதம்பரம்
சிலர் மிகவும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். தானுண்டு தன் பணமுண்டு என்று இருப்பார்கள். சிலரோ வசதி அதிகமாக அதிகமாக பிறருக்குத் தம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்வார்கள்.

""நான் இவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதித்தேன், யாருக்கும் தரமாட்டேன் என்று நினைப்பவர்கள் மத்தியில் என் தாத்தா வள்ளியப்பச் செட்டியார் தான் பணம் சம்பாதிப்பதே சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுத்து உதவத்தான் என்று நினைத்தார். அவர் வழியைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்'' என்கிறார் சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டர் நிறுவனர் வி.என்.சிதம்பரம்.

தனது தியேட்டரில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் இந்த ஆண்டு கல்வி கற்பதற்கான உதவித் தொகையை அவருடைய நிறுவனத்தின் சார்பில் வழங்கியிருக்கிறார்.

அவரிடம் பேசியதிலிருந்து...

எந்த வகையில் உங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உதவுகிறீர்கள்?

நான் சென்னையில் கமலா தியேட்டரை 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். 38 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சமீபத்தில் 39 ஆம் ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கினோம்.

தியேட்டர் லாபத்திலிருந்து இதற்காக ஐந்து லட்சம் ரூபாயை ஒதுக்கினோம். அதில் மூன்று லட்சம் ரூபாயை தியேட்டரில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகையாக வழங்கினோம்.

மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை மிக நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகையாக வழங்கினோம்.

அதுமட்டுமல்ல, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச மதிய உணவு, சீருடை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம். நாம் சம்பாதிப்பதில் சிறிதாவது பிறருக்குப் பயன்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்க உதவி செய்ததாகச் சொன்னீர்கள். எந்த அடிப்படையில் அந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

மதுரையில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த ஒருவரின் மகளுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்தோம். அந்தக் கட்டடத் தொழிலாளி ஒரு விபத்தில் கால்களை இழந்துவிட்டவர். அந்தத் தொழிலாளியின் மனைவி அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, வீட்டை விட்டுப் போய்விட்டார். அவருடைய குழந்தைகளைக் காப்பாற்ற பிச்சையெடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. இவ்வளவு கஷ்டத்திலும் அவர் தனது மகளைப் படிக்க வைத்தார். அவருடைய மகள் மீனா மதுரை, சின்ன சொக்கிகுளத்தில் உள்ள காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார். அவர் மாவட்ட அளவில் 3 வது ரேங்க் எடுத்தார். புவியியல் படிப்பில் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினார். இதைக் கேள்விப்பட்டு அவருக்கு நாங்கள் இந்த ஆண்டு மேற்படிப்பிற்காக உதவி செய்திருக்கிறோம். நாங்கள் உதவி செய்ததைக் கேள்விப்பட்டு மதுரை ஆட்சியர் அவர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடு கிடைக்க உதவி செய்திருக்கிறார்.

நாங்கள் கல்விக்காக உதவி செய்த இன்னொரு மாணவர் குமார். அவர் மதுரை தெற்குவாசலில் உள்ள நாடார் வித்யாசாலைப் பள்ளியில் படித்தவர். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவராகத் தேறினார். மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அவருடைய தந்தை கைவண்டி இழுக்கும் தொழிலாளி. அவருக்கு அம்மா இல்லை.

இப்படி மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குப் படிக்க உதவி செய்கிறோம்.

இப்படி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

நாம் இந்த சமுதாயத்தில் வாழ்கிறோம். இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்களுக்கு முன்னோடியாக என் தாத்தா வள்ளியப்பச் செட்டியார் இருந்திருக்கிறார். என் தாத்தா மிகவும் ஏழை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். 1905 இல் அவர் பணம் சம்பாதிப்பதற்காக மலேயா, பினாங்கு சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் 18 ரூபாய் கொடுத்தால் நாகப்பட்டினத்தில் இருந்து மலேயாவுக்கு எந்தவிதப் பாஸ்போர்ட்டும் இல்லாமல் சென்றுவிடலாமாம்.

அப்படி பணம் சம்பாதிப்பதற்காகச் சென்றவர், சில வருடங்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார். அவருக்கு மலேயாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் ரப்பர் தோட்டங்கள் இருந்தன.

ஆனால் எப்போதும் 4 முழ வேஷ்டியோடும் 5 முழத் துண்டோடும்தான் காட்சியளிப்பார். ரொம்ப எளிமையாக இருப்பார். "பணம் வரும், போகும். இடையில் ஆடாதே' என்பார். உடம்பு சரியில்லாமற் போய்விட்டால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராங்கியத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் 100 தேங்காய் உடைப்பார். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வார்.

அவருக்கு நெருக்கமானவர்கள் உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போனால் போதாதா? இப்படி எல்லாருக்கும் சாப்பாடு போடுகிறாயே? என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், சாப்பிடுபவரில் யாராவது ஒருவர் நான் நல்லா இருக்க வேண்டும் என்று வாழ்த்தினால், அது பலிக்குமல்லவா? என்று திருப்பிக் கேட்பார். அதைப் பார்த்துப் பழகிய எனக்கு நாமும் அவரைப் போலப் பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

அதனால்தான் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கும் கூட இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினேன்.

எதிர்காலத்தில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இந்த ஆண்டு 5 லட்சம் ரூபாயை உதவி செய்வதற்காக ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த ஆண்டு முதல் இதைப் பத்து லட்சம் ரூபாயாக அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் நான் வணங்கும் மதுரை மீனாட்சி அருள்புரிவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் மீனாட்சி அம்மனின் அருளால் எனக்கு நடந்திருக்கிறது.

நான் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பன். அவருடன் எனக்கு 30 வருட நட்பு. வடபழனியில் ஷூட்டிங் வரும்போது கொஞ்ச நேரம் கிடைத்தாலும் என்னைப் பார்க்க வந்துவிடுவார். குடும்ப நண்பர். ஆனால் எம்.ஜி.ஆரிடம் அவ்வளவு நெருக்கம் கிடையாது.

எம்.ஜி.ஆர். அவருடைய ஆட்சிக் காலத்தின்போது 1980 இல் என்னை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக நியமித்தார். மூன்று ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தேன். அதற்குப் பின் ஆறு ஆண்டுகள் தக்காராக இருந்தேன். அந்த ஒன்பது ஆண்டுகளும் என்னால் மறக்க முடியாதவை. மதுரைக் கோயிலுக்கு வரும் பெரிய பெரிய தலைவர்களுடன் எல்லாம் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் முதல் பிரதமர் ராஜீவ் காந்தி வரை பலருடன் பேசும், பழகும் வாய்ப்பு மீனாட்சி அம்மனின் அருளால் எனக்குக் கிடைத்தது. மேலும் நான் மக்களுக்குச் சேவை செய்ய மீனாட்சி அம்மன் அருள்புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் எனது மகன்கள், மனைவி கமலா ஆகியோரின் அன்பான ஒத்துழைப்பு இருப்பது எனக்குக் கூடுதல் பலம்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா,,, உமாசங்கர் மீது தமிழக அரசு ,

முதல்வரின் மனு நீதி

First Published : 25 Aug 2010 02:43:09 PM IST

Last Updated :

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.

மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.

அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.

மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.

ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?

Monday, August 2, 2010

பழனியில் சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள்

பழனியில் சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள்

First Published : 02 Aug 2010 12:49:00 AM IST
Last Updated : 02 Aug 2010 10:35:38 AM IST

கரடிக் கூட்டம் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியக் குறியீடுகள். (வலது) 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள்.
பழனி, ஆக. 1: பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம். இங்குள்ள கரடிக்கூட்டம் மலையில், கிழக்கு முகமாக உள்ள வழுக்குப் பாறையின் மேலே மூன்று குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தண்டபாணி என்பவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்த தகவல்கள்:
இவற்றை பாறை ஓவியம் என்பதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே சரியானது. இரண்டு குறியீடுகளும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுரமாக 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரத்தில் உள்ளது. வலதுபுறக் குறியீடு சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ளது. இதன் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை எதற்காக வரையப்பட்டது என்பது தெரியவில்லை. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளது.
சிந்து சமவெளி அகழாய்வில் 417 குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விவரம் முழுமையாகத் தெரியவில்லை. தற்போதுள்ள குறியீட்டில் வலதுபுறம் உள்ளது சிந்து சமவெளி குறியீட்டின் 240-வது வடிவத்தையும், இடதுபுறம் உள்ளது 247-வது குறியீட்டையும் ஒத்துள்ளது. இதேபோல குறியீடுகள் தர்மபுரி மாவட்டம் ஓதிக்குப்பம், பாபநத்தம் மற்றும் ஆண்டிமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல மதுரை அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழந்தமிழ் பிராமி கல்வெட்டிலும் இறுதியில் இக்குறியீடு உள்ளது. சங்க கால தமிழ் மக்கள் இவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது புரியவில்லை. இவற்றில் வலதுபுறம் உள்ளதை இடம் அல்லது மனை என்றும், காலம் அல்லது பொழுது என்றும் படித்துள்ளனர். இடதுபுறம் உள்ளதை வீடாக குறித்துள்ளனர் பலர்.
இவற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும் என்பது தெரியவருகிறது.
2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள் இந்த மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை உள்ளது. பெருவழிப்பாதை என்பது பழங்காலத்தில் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தப்பட்ட பாதையாகும்.
பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பாறைப் பல்லாங்குழிகள் உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரியும் நிலையில், மற்ற இரண்டு பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த பெருவழிப்பாதை வணிகர்கள் குகையில் தங்கும் போது பொழுது போக்க பயன்படுத்தியிருக்கலாம்.
பல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, ஜிம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.